Wednesday, March 18, 2009

வழியெங்கும் விசம்....

இது என் பாதை...

கல்லிருக்கும் முள்ளிருக்கும் என்ற
இலக்கிய விதிகள் இல்லை

அழகான நீரோடை குளிர்ந்த சோலைகள்
காதருகில் கவி பாடும் தேனீகள் கூட்டம்

தலைமுடியை வருடி செல்லும் தென்றல்
நாசியை நனைக்கும் ஒரு மெல்லிய நறுமணம்
பூக்கள் மேல் வண்டுகளின் முத்த சத்தம்

காது கூச வெட்கம் கொன்றிடும் யாரையும்..
மாதுளைகளையும் மாம்பழங்களையும்
வாசத்தை மட்டும் எனக்கு தந்து விட்டு
வாய் சுவையை அணில்கள் களவாடிச் சென்றது.

புயல் வீசப் பொறாத என் பூங்கா பாதை
கால் சென்ற வழியில் இரு வழி கொண்டது.

கண் கொள்ளும் தூரம் மட்டும் வண்ணத்துப் பூச்சிகள்
ஒரு பாதையில் என்னை வரவேற்க,

காலை நேர இளந்திரையின் வெளிச்சக் கீற்றுகளில்
இன்னொரு பாதயில் மயில்களும் மான்களும்......

ஒரு புறம் குயில் பாடும் கீதம்
மறுபுறம் பிள்ளை மொழியில் எனை அழைத்த கிளிகள்.

இந்தப் பக்கம் கடற்கரைகளின் காற்று சத்தம்
உப்புக்காற்றில் கரையோர பூக்களின் வாசம்
ஈர மண்ணில் கால்பதிக்கும் போதே
இருக்கும் சோகம் எல்லாம் கழுவிவிடும் கடலலை

அந்தப் பக்கம் ஆறாத அருவிகளின் அடங்காத ஓசை
கரை அருகில் நின்றாலே கவி ஆறு ஓடும் எவனுக்குள்ளும்
நீண்டு தொங்கும் நீர் மாலை அது
யாருக்கு தான் ஆசை இருக்காது அணிந்து கொள்ள.

இப்புறம் சென்றால் அப்புறம் வீணாமோ!
மாறிச் சென்றால் பாவமோ?

நெடுங்குழப்பம்; கடவுள் சித்தம்
வந்த வழி செல்ல எண்ணி கால்கள் திரும்பி கண் பார்க்கையில்
பூக்கள் விட்டு பூக்கள் செல்லும் தேனீக்களையும்
அழகான பூக்களோடு ஆளைக் கொல்லும் அரளியையும்
ஓடை அருகில் தவளைகளுக்காக தவம் செய்யும்
பாம்புகளையுமே கண்டது...

தீண்டிய தென்றல் ஒன்று புயலாய்
என் உயிர் தின்ன நின்றது....
வந்த வழி எங்கும் விசம்.
அதனால் இந்த இரண்டில் ஒன்று தான்
என் பாதை..

எவ்வழி போனாலும் அது எனக்கு விசமே
இன்னோரு பாதை என்னை சபிக்குமே
இறைவா இதுவும் உன் விளையாட்டா?

No comments: